71. திருநறையூர்ச்சித்தீச்சரம்
பதிக வரலாறு:
குடவாயிலில் வணங்கிப் பதிகம்பாடிய
பிள்ளையார் ‘ஊருலாவு’ என்னும் நீடுதமிழ்த்தொடை
புனைந்துகொண்டே வழிநடந்து திருநறையூரை யடைந்தார்கள்.
இதில் நறையூர் என்பது தலத்தின் பெயராகவும், சித்தீச்சரம்
என்பது கோயிலின் பெயராகவும் குறிக்கப்படுகிறது.
‘சித்தன் சித்தீச்சரம்’ என இறைவன் திருநாமம்
சித்தன் எனக் குறிக்கப்படுகிறது.
பண்: தக்கேசி
பதிக எண்:71
திருச்சிற்றம்பலம்
765. பிறைகொள்சடையர் புலியினுரியர்
பேழ்வாய் நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங்
கையர் கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர்
மனையின் மகிழ்வெய்திச்
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச்
சித்தரச் சரத்தாரே. 1
__________________________________________________
1. பொ-ரை: பெருமை உடைய மறையவர் தங்கள்
இல்லங்களில் வேதப்பொருள்களை உள்ளடக்கிய பாடல்களைப்
பாட, அதனைக் கேட்டுச் சிறகுகளைக் கொண்ட வண்டுகள்
மகிழ்வெய்திப் பாடித் தேனை உண்ணுகின்ற நறையூரில்
விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பிறைசூடிய
சடையர் புலித்தோலை உடுத்தவர். பிளந்த வாயினை
உடைய பாம்பினை அணிந்தவர். விடக் கறை பொருந்திய
கழுத்தை உடையவர். பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை
உடையவர். எலும்பு மாலை அணிந்தவர்.
கு-ரை: நறையூர்ச் சீத்தீச்சரத்தார்
பிறைச்சடையர், புலித்தோலர், அரவார்த்தவர்,
நீலகண்டர், கபாலி, கங்காளர், என்கின்றது. பேழ்வாய்
- பிளந்த வாய். கங்காளம் - முழு எலும்பு. சேடர் -
பெருமையுடையவர்.
|