1077. அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப
வரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலைக்
குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத
பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும்
பணிவீர்காள். 9
1078. பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு
பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங்
குற்றாலம்
இருந்துண்டேரு நின்றுண்சமணு
மெடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலு
மடியீர்காள். 10
___________________________________________________
9. பொ-ரை: பணியும் தொண்டர்களே!
பாம்பின் வாயில் அமைந்த வளைந்த கூரிய பற்களை
ஒப்ப அரும்பீன்று குரவ மரங்கள் பூத்துள்ள பாவை
போன்ற மலர்களின் மணம் தங்கியுள்ள குற்றாலம்.
பிரமன் மால் அறியாப் பெரியோனாகிய எம் பரமன்
மேவியுள்ள நன்னகராகும்.
கு-ரை: குரவம்பாவை பாம்பின்
பல்லைப்போல் அரும்பீன்று மணங்கமழும் சோலை
சூழ்ந்த குற்றாலம், அயனும் மாலும் அறியாத பரமன்
நகர் என்கின்றது. முள் எயிறு - முள் போன்ற பல்.
10. பொ-ரை: அடியவர்களே! பெரிய
தண்ணிய மலைச்சாரலில் வாழ்கின்ற சிறகுகளை உடைய
வண்டு தன் பெண் வண்டை விரும்பிக் கூடி குருந்த
மரத்தில் ஏறிச் செவ்வழிப் பண்பாடும்
குற்றாலம், இருந்துண்ணும் புத்தர்களும், நின்று
உண்ணும் சமணர்களும் புறங்கூற அரிய தண்ணியோனாகிய
சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும்.
கு-ரை: வண்டு பெண் வண்டைப்
புணர்ந்து செவ்வழிப் பண்ணைப் பாடும் குற்றாலம்,
தண்ணிய இறைவன் மேய நகர்
|