பக்கம் எண் :

1066திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3736. இட்டுறு மணியணி யிணர்புணர்
       வளரொளி யெழில்வடம்
கட்டுறு கதிரிள வனமுலை
     யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயன் மருவுநள்
     ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை
     பழுதிலை மெய்ம்மையே.               3


“தீத்தான் உன் கண்ணிலே, தீத்தான் உன்கையிலே, தீத்தான் உன்றன்
புன்சிரிப்பிலே, தீத்தான் உன், மெய்யெல்லாம் புள்ளிருக்கு வேளூரா” என்ற
காளமேகப் புலவர் தனிப்பாடலாலும், எரியுள் நின்று ஆடுவர் என்பதாலும்,
அட்டமூர்த்தங்களுள் நெருப்பு ஒன்று ஆதலாலும் அறிக.

     3. பொ-ரை: பூங்கொத்துக்களைப் போன்று, இரத்தினங்கள்
வரிசையாகக் கோக்கப்பட்ட மாலையணிந்த உமாதேவியின், ஒளி வீசும்
இளைய அழகிய முலைகளைத் தழுவும், கதிர்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள
வயல்வளமிக்க திருநள்ளாறு இறைவனின் புகழ் உரைக்கும் திருப்பதிகம்
எழுதப்பட்ட ஏடுகளை அனல் வாதத்திற்கென வளர்க்கப்பட்ட
நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.

     கு-ரை: இட்டு - பதிக்கப்பட்டு. உறும் - பொருந்திய, மணி அணி
இரத்தினங்களின் வரிசைகள். இணர் - பூங்கொத்துக்களைப் போல. புணர் -
பொருந்திய. (வளர், ஒளி, எழில்). வடம் - மாலை. கட்டு உறு -
அணியப்பெற்ற. கதிர் - ஒளியையுடைய. (இரு தனங்களுடன்). கலவலின் -
கலத்தலால். நட்டு - (பயிர்கள்) நடப்பட்டு. உறு - பொருந்திய. (நள்ளாறு).
நாமம் - புகழ். இட்டு உறும் - சிறியதாகியுள்ள. இந்த எரியில் இடில், பெரிய
நெருப்பின் திறம் அமைந்த இவை எங்ஙனம் பழுதுறும்? பழுது இலவேயாம்
என்க. மணிகளின் வரிசைக்குப் பூங்கொத்து உவமை. ஈற்றடியில் இட்டு -
இட்டிது என்பதன் மரூஉ. “ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை”
(குறள். 478.) இனி இட்டு உறும் எரி - உண்டாக்கிய செயற்கை நெருப்பு,
இயற்கை நெருப்பின் திறனை என்செயும்? எனினும் ஆம்.