பக்கம் எண் :

1094திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

90. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்

பதிக வரலாறு:

     வேதத்தைத் தமிழால் விரித்த ஞானசம்பந்தர், திருமணஞ்சேரி, எதிர்
கொள்பாடி என்னும் பதிகளை எய்தி, ஒப்பில் பதிகங்கள் பாடி, ஓங்கு
வேள்விக்குடி உற்று, அங்கு மணவாள நற்கோலத்தைத் தழுவிய
தன்மையுடன் திருத்துருத்தியில் பகலில் காட்டக்கண்டருளிப் பாடிய
தண்டமிழ் மாலை இத்திருப்பதிகம்.

பண்: சாதாரி

ப.தொ.எண்: 348 பதிக எண்: 90

திருச்சிற்றம்பலம்

3767. ஓங்கிமே லுழிதரு மொலிபுனற்
       கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல
     னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம்
     புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத்
     துறைவர்வேள் விக்குடியே.             1


     1. பொ-ரை: சிவபெருமான், மேன்மேலும் ஓங்கி எழுந்து ஓசையுடன்
பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில்
தாங்கியவர். இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக்
கொண்ட தலைவர். முறைப்படி, பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான
சோலைகள் சூழ்ந்ததும், நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும்
திருத்தலத்தை உடையவர். அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: மேலும் மேலும் ஓங்கிப் பரவிவந்த ஓசையையுடைய கங்கை
நீரை ஒரு சடைமேல் தாங்கினவர், உலகையே அழிப்பது போல்
பெருக்கெடுத்த நீரை, ஒரு சடையில் தாங்கினான் என ஓர் நயம். இடுபலி -
இடும் பிச்சையைத் தலைகலனாக ஏற்கும், தம் பெருமான்,