பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)104. திருப்பரிதிநியமம்1197

104.திருப்பரிதிநியமம்

பதிக வரலாறு:

     அவளிவள்நல்லூரில் தம்பரிசுடையாரை வணங்கிப் பல தலங்களைத்
தரிசித்து, பழுதில் சீர்த் திருப்பரிதிநன்னியமம் பணிந்து பாடியருளிய
எழுதுமாமறையாம் இசைத் திருப்பதிகம் இது.

பண்: பழம்பஞ்சுரம்

ப.தொ.எண்: 362 பதிக எண்: 104

 திருச்சிற்றம்பலம்

3912. விண்கொண்ட தூமதி சூடிநீடு
       விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப்
     பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த
     கள்வர்க் கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும்
     பரிதிந் நியமமே.                      1


     1. பொ-ரை: ஆகாயத்தை இடமாகக் கொண்ட வெண்ணிறப் பிறைச்
சந்திரனைச் சூடிய நீண்ட விரிந்த சிவந்த சடைதாழ, உமா தேவியை ஒரு
பாகமாகக் கொண்டு தம் திருமார்பில் திருவெண்ணீற்றினைப் பூசி,
பெருமைக்கு ஒவ்வாமல் பிச்சை ஏற்று, கண்ணைக் கவரும் தோற்றப்
பொலிவொடு வந்து என் அழகைக் கவர்ந்த கள்வரான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும்
திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலம் ஆகும்.

     கு-ரை: விண்கொண்ட - ஆகாயத்தை இடமாகக் கொண்ட. தூமதி -
வெண் பிறையை. நீடு - நெடிய. விரி -விரிந்த, புன் சடை. தாழ - தொங்க.
பேணார் - "இரத்தலின் இன்னாததில்லை" யெனலைப் பேணாதவராய்
(பேணார் - முற்றெச்சம்). பலி தேர்ந்து - பிச்சைக்கு வருபவராய். கண்
கொண்ட - கண்ணைக் கவரும். சாயலோடு - (எனது) தோற்றப் பொலி
வோடு. ஏர் - அழகையும் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும். முற்
பதிகத்துக்கு உரைத்ததையேயுரைக்க. பண் கொண்ட - இசையையுடைய.
வண்டு இனம் பாடி ஆடும் (-சுற்றித் திரியும் சோலைகளையுடைய) பரிதி
நியமம்.