பக்கம் எண் :

1342திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4104. முருகினார் பொழில்சூ ழுலகினா ரேத்த
       மொய்த்தபல் கணங்களின் துயர்கண்
டுருகினா ராகி யுறுதிபோந் துள்ள
     மொண்மையா லொளிதிகழ் மேனி
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக்
     கடலுணஞ் சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணை நல்லூர்
     நின்றவெம் பசுபதி யாரே.              4

4105. பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து
       பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினா ருருவின் மிளிர்வதோ ரரவ
     மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித்
     தொன்மையார் தோற்றமுங் கேடும்
பன்னினார் போலும் பந்தணை நல்லூர்
     நின்றவெம் பசுபதி யாரே.              5


     4. பொ-ரை: இறைவன் அழகிய சோலைகள் சூழ்ந்த உலகத்தார்
போற்றி வணங்க, நெருங்கிய பலவகைக் கணங்களின் துயரினைக் கண்டு
உருகி, உள்ள உறுதியோடு, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற தங்கள் உடல்கள்
கருநிறம் அடையப் பெற்றாராகிய திருமால் முதலிய தேவர்களெல்லாம்
கைதொழுது வணங்க, அவரது துன்பத்தினைப் போக்கக் கடலுள் எழுந்த
நஞ்சினை அமுதம்போல் வாங்கிப் பருகினவர். அப்பெருமான்
திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார்
ஆவார்.

     கு-ரை: வாங்கிப் பருகினார் - எடுத்துண்டார்.

     5. பொ-ரை: இறைவர் பொன்போன்ற பெரிய கொன்றை மாலையை
வண்டுகள் கிளர்ந்து ஒலிக்கும்படி மார்பில் அணிந்துள்ளவர். அத்துடன்
முப்புரி நூலும் அணிந்துள்ளவர். மின்னல் போன்று ஒளியுடைய பாம்பை
அணிந்துள்ளவர். திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர். தம்மை வந்தடைந்த
சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறப்பொருள் உபதேசித்தவர்.
தொன்மைக்கோலம் உடையவர். மாறி