பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)122. திருஓமாம்புலியூர்1347

122. திருஓமாம்புலியூர்

பதிக வரலாறு:

      பந்தணைநல்லூரைப் பணிந்து பாடியபின், தீங்குதீர் மாமறைச்
செம்மையந்தணர் ஓங்கும் ஓமாம் புலியூர் வந்துற்றுப் பாடியருளியது
இத்திருப்பதிகம்.

பண்: புறநீர்மை

ப.தொ.எண்: 380 பதிக எண்: 122

திருச்சிற்றம்பலம்

4111. பூங்கொடி மடவா ளுமையொரு பாகம்
       புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிரு ணட்ட மாடுமெம் விகிர்தர்
     விருப்பொடு முறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச்
     செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழா ரோமமாம் புலியூ
     ருடையவர் வடதளி யதுவே.             1


     1. பொ-ரை: இறைவன் பூங்கொடி போன்ற உமாதேவியை ஒரு
பாகமாக உடையவர். முறுக்குண்ட சடைமுடியையுடைய அடிகள். உலகம்
சங்கரிக்கப்பட்டு ஒடுங்கிய ஊழிக்காலத்தில் நடனமாடும் விகிர்தர்.
அப்பெருமான் விருப்பத்துடன் வீற்றிருந்தருள்கின்ற இடம் எது என வினவில்,
தேன்மணம் கமழும் சோலைகளிலுள்ள செழுமையான மலர்களைக் குடைந்து
நெருங்கிக் கூட்டமாயமைந்த வண்டுகள் இசைபாடுகின்ற, ஓங்கிய
புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற ஓமமாம்புலியூரில்
அப்பெருமானுக்குரிய உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

     கு-ரை: கோதுதல் - கிளறுதல்; உளர்தல். இவை ஒரு பொருட்கிளவி.
“வீங்கிருள் நட்டமாடும் எம் விகிர்தர்” “நள்ளிருள் நட்டம் பயின்றாடும்
நாதனே” என இக்கருத்துத் திருவாசகத்திலும் வருகிறது. தளி - கோயில்.