பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)54. பொது753

54. பொது

பதிக வரலாறு:

     நான் மறை வாழவந்தவராகிய புகலிவேந்தர் பஞ்சவன் நாட்டுளோர்க்கு
நன்னெறி காட்ட வந்தவர் ஆதலின் சின்னங்கள் ஒலிக்க வையையாற்றின்
கரையை மருவினார். பருவ மகளிர் உள்ளம் தம் பதியிடத்தில் விரைந்து
செல்லும் ஆறுபோல, அவ்வாறும் தன் பதியான கடலை நோக்கி விரைந்து
ஓடுகின்றது. அரசன், ஆளுடைய பிள்ளையாரையும் அமணரையும் “ஆற்றில்
அவரவர் ஏட்டை விடுக” என்றான். அமணர் விட்ட ஏடு ‘அத்திநாத்தி’
என்பதைக் கொண்டது. அது இரண்டாவதாயுள்ள நாத்தியை வெள்ளத்தில்
காட்டிற்று. அமணர் வெட்கத்துடன் பிள்ளையாரது திருஞானப் பாடலை
விடச்சொல்லினர். தேசுடைப் பிள்ளையார் பாசுரம் பாடலுற்றார். அதுவே
இத்திருப்பதிகம்.

பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்:312   பதிக எண்: 54

திருச்சிற்றம்பலம்

3372. வாழ்க அந்தணர் வானவ ரானினம்
  வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.     1


     இப்பதிகத்துக்குச் சேக்கிழார் பெருமான் விளக்கியருளிய
     உரைக்குறிப்பே போற்றப்பெறுகிறது.

     1. பொ-ரை: உலக நன்மையின் பொருட்டு வேள்விகள், அர்ச்சனைகள்,
வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க. அவ்வேள்விகளைச்
சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க. வேள்வி, ‘வழிபாடு
இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும், திருநீற்றினையும் அளிக்கும்
பசுக்கூட்டங்கள் வாழ்க. வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக.
சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின்
செங்கோலாட்சி ஓங்குக. வேள்விகளால் வரும் நலங்களை அடைய
வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க.