பக்கம் எண் :

158
 

காலங்களிலும், விஜயநகர வேந்தர்களுள் கேசவப்பநாயக்கர் மகனார். அச்சுதப்பநாயக்கர் முதலானோர் காலங்களிலும் பொறிக்கப் பெற்ற அறுபத்தைந்து கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களுள் வன்மீகநாதரின் பெயர் புற்றிடங் கொண்டார் என்றும், தியாகராசரின் பெயர் வீதிவிடங்கர், திருவாரூர் உடையார் வீதிவிடங்க மாதேவர் எனவும், அம்மையார் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார் என்றும், அரநெறிக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் இறைவர், திரு அரநெறி உடையார் என்றும், பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமண்டளியுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டனர்.

அரநெறிக்கோயில் : இக்கோயிலைக் கற்றளியால் கட்டியவர், கோயில் திருவிசைப்பா (பதிகம்) பாடிய கண்டராதித்த சோழதேவரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியார் ஆவர். இத்திருக்கோயில் அரநெறி உடையார்க்குத் திருநொந்தா விளக்கு இரண்டினுக்குக் குரு காலன் திருமூலட்டானத் தொண்டர் மேன்மங்கலத்தில் மூன்றுவேலி நிலத்தை முதல் இராஜராஜ தேவரின் ஆட்சியாண்டு இருபது, நாள் இருநூற்று ஏழில் கொடுத்துள்ளார். முதலாம் இராஜாதிராஜரின் இருபத்தேழாம் ஆண்டில் அரநெறி உடையார்க்கு அணுக்கியார் பரவை நங்கையார் தீபங்குடி மேல்மங்கலம் கிராமத்தில் வழி பாட்டிற்காக நிலம் கொடுத்திருந்தனர்.

ஏனைய கோயில் கல்வெட்டுக்களில் கண்ட செய்திகள்:

கோனேரின்மைகொண்டான் திருவாரூர் மூலத்தானமுடையார்க்குத் திருப்போனகத்திற்கும் தான் பிறந்த நாளில் விழா எடுப்பதற்கும் நிலம் விட்டிருந்தான். கங்கைகொண்ட சோழனது மகனாகிய முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் பூண்டிக்கூத்தன் செம்பியன் மூவேந்தவேளான், வீதிவிடங்க தேவர்க்கு அணிகலன்கள் அளித்திருந்தான். அவன்மீது நான்கு பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. வீதிவிடங்கப் பெருமானின் கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம் இவைகளைப் பொன்வேயுமாறு, கங்கைகொண்ட சோழனது இரண்டாவது மகனாகிய விஜயராஜேந்திரன், வேளாக்கூத்தனாகிய செம்பியன் மூவேந்த வேளானுக்குக் கட்டளையிட்டிருந்தனன். தன்மகன் வீரசோழ அணுக்கன்மீது வீர அணுக்கவிஜயம் என்னும் நூலை எழுதிய பூங்கோயில் நம்பிக்கு, இவ்வேந்தன் நிலம் அளித்திருந்தான். இவ்வேந்தன் காலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டுப் புறக்குடி உடையான் சுற்றி ஆதித்தனான