போந்தன இல்லை-புறத்துச் செல்லவில்லை. ‘இங்ஙனமாகலின் எனக்கு மற்று உறவு என்’ என்க. ‘வடவாறு’ என்பது தஞ்சாவூரின் வடக்குப்புறத்தில் ஓடும் ஓர் யாறு. இடு-அதன் கண் அமைக்கப்பட்ட. புனல் மதகு-நீரையுடைய வாய்க்கால் தலைமதகு. ‘நீர் சூழ்’ என இயையும், கிடங்கில்-அகழிபோல. ‘‘இவர்க்கு’’ என்பது, முன் உள்ள ‘அகலா, புகுந்தன, போந்தன வில்லை’ என்பவற்றோடு முடியும். நான்கனுருபு, ‘இவற்கு இஃது இயல்பு’ என்றல்போலப் பண்புத் தற்கிழமைக்கண் வந்தது. 164. ‘மகுடத்தின்கண்’ என உருபு விரிக்க. ‘வெண்ணிலா விரிதரு குடை’ என்க. தரளத்தால் வெண்ணிலா விரிவதாயிற்று. தரளம்-முத்து. குறிப்பு-கருத்து. ‘‘குறிப்பென்னோ’’ என்றது, ‘மாதர் உள்ளங்களைக் கவர்வதுபோலும்’ என்னும் குறிப்புடையது. கோங்கு இணர்-கோங்கம்பூக்கொத்து ; இது குடைக்கு வடிவுவமை. துணியால் ஆக்கப்பட்ட குடைக்கு இவ்வுவமை பொருந்துவதாகும். தேய்ந்து-தேய்தலால். உக்க-உதிர்ந்த. ’உக்க குவை’ என இயையும். ‘‘செஞ்சுடர்ப்படு குவை’’ என்றதனால், ‘மாணிக்கக் குவை’ என்பது தோன்றிற்று. படு-உண்டாகின்ற. குவை ஓங்கு இடைகெழு மாடம்-குவியல்கள் மிக்கிருக்கின்ற இடத்திற் பொருந்திய மாடம். இடம், வீதி. ‘இடைகழி மாடம் என்பதும் பாடம். ‘மாடத் தஞ்சை’ என்க. இப்பாட்டு, காதல் நோய் கொண்டாள் கூற்றாய் அமைந்தது. |