5. கச்சிநெறிக் காரைக்காடு. (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்திலுள்ள கோயில் | தொண்டை நாட்டுத் தலம். காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற ஐந்து திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று. இக்கோயில் ஊருக்குச் சற்றுத் தள்ளி உள்ளது. இப்பகுதி தற்போது ‘திருக்காலிமேடு’ என்று வழங்கப்படுகிறது. ரயில்வே ரோடில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் திருக்காலிமேட்டிற்குச் செல்லும் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம். கோயில்வரை கார், வேன், பேருந்து முதலியன செல்லும். மக்கள் வழக்கில் இக்கோயில் ‘திருக்காலீஸ்வரர் கோயில்’ என்று வழங்குகின்றது. ஞானசம்பந்தர் வாக்கில் “கச்சிநெறிக்காரைக்காட்டாரே” என்ற திருப்பெயர் வருகிறது. ஒரு காலத்தில், இப்பகுதியே காஞ்சிக்கு வரும் வழியாக அமைந்திருந்ததாலும், இப்பகுதி காரை (முட்) செடிகள் நிரம்பியிருந்ததாலும் கச்சிநெறிக், “காரைக்காடு” என்று பெயர் பெற்றது. இந்திரனும், புதனும் வழிபட்ட தலம். அதனால் இப்பகுதிக்கு இந்திரபுரி என்றும் பெயர் வழங்கியது. சம்பந்தர் பாடல் பெற்றது. இறைவன் - சத்தியவிரதேஸ்வரர். (இப்பெயரையொட்டியே காஞ்சிக்கு ‘சத்தியவிரதக்ஷேத்திரம்’ என்ற பெயருண்டாயிற்று) மேற்கு நோக்கிய சந்நிதி. பழைமையான ராஜகோபுரம் - மூன்று நிலைகளை உடையது. எதிரில் நந்தியும் - கவசமிட்ட கொடி மரமும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் நேரே மூலவர் சந்நிதி தெரிகின்றது. இடப்புறமாக வலம் வருகிறோம். சந்நிதிகள் ஏதுமில்லை. வலமுடித்து வாயிலில் நுழையும்போதும் இடப்புறமாக உள்ள நவக்கிரக சந்நிதியைக் காணலாம். உள்ளே சென்று உட்பிராகாரத்தை வலமாக வரும்போது முதலில் அம்பலக்கூத்தர், சிவகாமியுடன் ஆனந்தமாகக் காட்சி தருகின்றார். அற்புதமான திருமேனி. அடுத்து நால்வர், இந்திரன், புதன், பைரவர் மூலத் திருமேனிகள் காட்சியளிக்கின்றன. விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள். அடுத்து கஜலட்சுமி, நீலகண்ட சிவாசாரியார் மூலத் திருமேனிகள் உள்ளன. |