117/63. திருஈங்கோய்மலை திருவிங்கநாதமலை | சோழ நாட்டுத் தலங்களுள் காவிரியின் வடகரையில் உள்ள திருமுறைத் தலங்களுள் இது கடைசித்தலம். இதற்கு நேர் எதிரில், தென்கரையில் உள்ள முதல் தலமான வாட்போக்கி உள்ளது. தற்போது மக்கள் வழக்கில் திருவிங்கநாதமலை என்று வழங்கப்படுகிறது. திருச்சி-சேலம் பெருவழிப் பாதையில் முசிறிக்கு அண்மையில் இத்தலம் உள்ளது. கடம்பந்துறை (குளித்தலை) யிலிருந்து சென்று அகண்ட காவிரியைக் கடந்து அக்கரையில் உள்ள இத்தலத்தை அடையலாம். திருச்சி-நாமக்கல்-சேலம் பேருந்தில் செல்லலாம். கோயில் குன்றின் மேல் உள்ளது. அம்பிகை வழிபட்டதால் இதற்குச் சிவசக்திமலை என்று பெயர் வழங்குகின்றது. அகத்தியர், ஈவடிவில் சென்று சுவாமியைத் தரிசித்த தலம். இறைவன் - மரகதாசலேசுவரர், மரகத நாதர். இறைவி - மரகதவல்லி. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சிவலிங்கம் மரகதக்கல் போல நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது. நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது ‘ஈங்கோய் எழுபது’ என்ற நூலைப் பாடியுள்ளார். |