132/15. தென்குடித்திட்டை திட்டை | சோழநாட்டு (தென்கரை)த் தலம். கும்பகோணம் - திருக்கருகாவூர் பாதையில் உள்ளது. கும்பகோணம் - திருக்கருகாவூர் நகரப் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது. தஞ்சை - மயிலாடுதுறை இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் - திட்டில் - அமைந்துள்ள ஊராதலின் திட்டை எனப் பெயர் பெற்றது. ‘குடித்வீபம்’ (குடித்திட்டை) எனப்படும் இத்தலம் வசிட்டர், தேவர், பைரவர், முருகன், பிரமன், திருமால், காமதேனு, ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட தலம். சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி - தேரூர் என்றும் ; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும் ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் பெயர் பெற்றது. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதென்றும், இறைவன் சுயம்பாக வெளிப்பட்டு அருள்புரிந்தான் என்பதும் வரலாறு. இதனால் ‘குடித்திட்டை’ எனப்பெயர் பெற்றது. நல்ல கட்டமைந்த கற்கோயில். எல்லாச் சந்நிதிகளும் மழமழப்பாக்கப்பட்ட கருங்கற்களாலானவை. |