பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 473


     “தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
      நிலையினான் மறைத்தான் மறைக் கொண்ணுமே
      அலையினார் பொழில் ஆறை வடதளி
      நிலையினானடியே நினைந்துய்ம்மினே”        (அப்பர்)

                                            - துட்டமயல்
     தீங்கு விழையார் தமை வான் சென்றமரச் செய்விக்க
     ஓங்கு பழையாறையில் என்னுள்ளுவப்பே.
                                             (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. சோமேசர் திருக்கோயில்
     பழையாறை - பட்டீஸ்வரம் அஞ்சல் - 612 703
     கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

142/25. திருவலஞ்சுழி

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    சுவாமிமலைக்குப் பக்கத்தில் உள்ள தலம்.

    கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாவநாசம், சுந்தரப் பெருமாள்
கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று
கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது. குடந்தை
யிலிருந்து அடிக்கடி பேருந்து உள்ளது. காவிரி வலமாகச் சுழித்துச்
செல்லுமிடத்தில் உள்ளதால் ‘வலஞ்சுழி’ என்று பெயராயிற்று.
திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் இஃது விநாயகருக்கு உரிய
தலமாகும்.

    சக்திவனம், தக்ஷிணாவர்த்தம் என்பன வேறு பெயர்கள். பாய்ந்து வந்த
காவிரியாறு, ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில்
இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது,
அசரீரியாக இறைவன், “மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதலத்தில்
பலியிட்டுக் கொண்டால் அப்பிலம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி
வெளிப்படும்” என்றருளினார்.