பக்கம் எண் :

சீறாப்புராணம்

1098


இரண்டாம் பாகம்
 

2959. முன்னரி ரண்டிறக் ஆத்து முற்றிய

     பின்னரிற் ககுபத்துல் லாவைப் பெட்புற

     வுன்னினர் நோக்கின ரோதும் பாதியுந்

     துன்னிய குழுவுடன் றொழுது வைகினார்.

7

      (இ-ள்) அவ்விதம் அமிழ்ந்தி ஆதியில் தொழுது முடிந்த தான இரண்டு றக்ஆத்தின் பின்னர்க் கூறா நிற்கும் பாதியாகிய இரண்டு றக்ஆத்தையும் தங்களுடன் நெருங்கிய கூட்டத்தார்களாகிய அசுஹாபிமார்களோடும் அன்பானது பொருந்தும் வண்ணம் கஃபத்துல்லாவைச் சிந்தையின் கண் சிந்தித்துப் பார்த்துத் தொழுது அங்கு தங்கி இருந்தார்கள்.

 

கலிநிலைத் துறை

 

2960. பருதி வானவன் விலகிய நெடும்பதி தனக்கு

     நரலை போல்வளம் பெருகிய மதீனமா நகர்க்குந்

     தெரிகி லாதுற நிமிர்ந்துமா றோய்தரத் திரண்ட

     வரைக ளியாவையும் பதுக்கையுந் திடருது வனமும்.

8

      (இ-ள்) அவ்வா றிருக்க, சந்திரனும் சூரியனும் விலகிச் செல்லுகின்ற நீண்ட பட்டணமாகிய திரு மக்கமா நகரத்திற்கும் சமுத்திரத்தைப் போலும் செல்வமானது பெருகிய திரு மதீனமா நகரத்திற்கும் தெரியாது மிகவும் ஓங்கி மேகங்க ளானவை யுறையும் வண்ணம் திரட்சி யுற்ற எல்லா மலைகளையும் சிறு திட்டைகளையும் மணற் குன்றுகளையும் பொருந்திய சோலைகளையும்.

 

2961. இருநி லம்பிதுங் கிடக்கட லலைகிடந் தெறிய

     நிறைம ணிக்கதி ரெறித்திட நெடுங்கரத் தமிழ்த்தி

     யொருநி லத்தள வாக்கியங் குறைந்தன ருடுக்கள்

     செருகும் வானகங் கீண்டிட வருஞ்சிபு ரீலே.

9

      (இ-ள்) பெருமை பொருந்திய இப் பூமி யானது பிதுங்கவும், சமுத்திரத்தின் அலைக  ளானவை கிடந்து வீசவும், நட்சத்திரங்களால் அடைசப் பெற்ற ஆகாயத்தி னிட மானது கிழியும் படி வந்த அந்த ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் வரிசை யாகிய இரத்தினங்களினது பிரகாசமானது பிரகாசிக்கும் வண்ணம் தங்களின் நெடிய கைகளினால் தாழ்த்தி ஒப்பற்ற பூமியினது அளவாகச் செய்து அங்கு தங்கியிருந்தார்கள்.

கலிவிருத்தம்

 

2962. சூன்முகில் குலவிய வரையின் சுற்றெலாம்

     வானவர் கோன்புவி யிடையின் மாட்டலாற்

     பூநிமிர் ககுபத்துல் லாவும் பூணெனுங்

     கானமர் தூதர்கண் காண லாயதே.

10