பக்கம் எண் :

சீறாப்புராணம்

1366


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) தங்களது அருமையான தவத்தினாற் பெற்றெடுத்து மகிழ்ச்சியடைந்த பெண்களுக்கு அரசானவர்களும், கெண்டை மீனை நிகர்த்த கருநிறந் தங்கிய பெரிய கண்களை யுடையவர்களும், நறிய வார்த்தைகளைக் கொண்ட கனியானவர்களும் வருந்துகின்ற மெல்லிய ஆபரணங்களையுடைய கொடியானவர்களும், மெல்லிய பெட்டை யானையை நிகர்த்த நடையையுடைய மயிலானவர்களும், அருமை பொருந்திய அமுதமானவர்களும், ஹபுசா றலி யல்லாகு அன்ஹா வென்று சொல்லுங் கிளியை யொத்த மாதானவர்களும்.

 

3732. குறைசி யங்குலக் காவினி லுறைந்தகோ குலத்தைப்

     பொறையு நீதியு மொழுக்கமும் விளைத்தபொன் னிலத்தை

     யுறையுங் கற்பினுக் குறையிடத் தினையொளிர் மணியை

     மறையி னேர்நபி முகம்மது வதுவையின் மணந்தார்.

4

      (இ-ள்) அழகிய குறைஷி வங்கிடமாகிய சோலையில் தங்கிய குயிலானவர்களும், பொறுமையையும் நியாயத்தையும் ஒழுக்கத்தையு முண்டாக்கிய பொன்னில மானவர்களும், தங்கிய கற்புக்கு வீடானவர்களுமாகிய பிரகாசிக்கின்ற இரத்தின மானவர்களைப் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தின் ஒழுங்கையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் விவாகமாக மணந்தார்கள்.

 

3733. புரந்த ராதிபர்க் கரியும றருள்புதல் வியரைத்

     தெரிந்த நன்மொழி தரும்அபு சாவெனுந் திருவை

     வரைந்து நந்நபி யின்புறும் வாரியின் மூழ்கிப்

     பிரிந்தி டாநலம் பொருந்தியுண் டிருந்ததற் பின்னர்.

5

     (இ-ள்) நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தோள் வலிமையைக் கொண்ட அரசர்களாகிய யானைகளுக்குச் சிங்கமான உமறுகத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்கள் இவ்வுலகத்தின்கண் தந்த புத்திரியும் விளங்கிய நல்ல வார்த்தையை யருளுகின்ற ஹபுசா றலி யல்லாகு அன்ஹா என்று சொல்லும் பெயரையுடைய இலக்குமியு மானவர்களை, அவ்வாறு விவாகமுடித்து அதிகரித்த சந்தோஷ சமுத்திரத்தில் மூழ்கி நீங்காத நன்மையைப் பொருந்தி யுண்டுறைந்ததின் பின்னர்.

 

3734.  பூத லம்புகழ் தருங்கதீ சாபுதல் வியரின்

     மாத ருக்கர சும்முக்குல் தூமணி விளக்கைக்

     கோதி லாவுது மான்மனங் களிப்புறக் கொடுத்தா

     ராத ரத்துடன் மகிழ்ந்தினி துறைந்தன ரன்றே.

6