பக்கம் எண் :

சீறாப்புராணம்

1510


இரண்டாம் பாகம்
 

பதுறுசுகுறாப் படலம்

 

வஞ்சி விருத்தம்

 

4140. போற்றும் வேதநூற் புண்ணியர்

     மாற்ற மீறவே வாழுநாட்

     சாற்று துல்கயி தாவெனு

     மேற்ற மாதமா மேல்வையில்.

1

      (இ-ள்) யாவருந் துதிக்கா நிற்கும் புறுக்கானுல் மஜீதென்னும் வேதாகமத்தையுடைய தருமவாளரான நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கீர்த்தியான ததிகரிக்கும் வண்ணம் அந்தத் திருமதீனமா நகரத்திலிருந்து வாழும் நாளாகிய சொல்லுகின்ற துல்கயிதாவென்னும் மேன்மை பொருந்திய மாதமாகிய காலத்தில்.

 

4141.  உகுதெ னும்படை யுற்றிடத்

     தகவி லாப்புறந் தந்தநா

     ளிகல பாசுபி யானெனுந்

     திகழ்த ரும்பவச் செய்கையன்.

2

     (இ-ள்) உகுதென்று சொல்லுந் தானத்தில் சைனியங்களானவை வந்து சேர, தகுதியின்றித் தோற்றோடிய காலத்தில், விரோதத்தைக் கொண்ட அபாசுபியா னென்று சொல்லும் விளங்குகின்ற வீணான தொழில்களை யுடையவன்.

 

4142.  பதுறி னிற்பலர் வந்திடுஞ்

     சதுர்மி குத்திடுஞ் சந்தையி

     லிதமொ டுநபி யெய்தினாற்

     கதமு டைத்திறங் காணலாம்.

3

      (இ-ள்) பலரும் வருகின்ற பதுறென்னுந் தானத்திலுள்ள சதுரானததிகரித்த சந்தையின் கண் சந்தோஷத்தோடும் நபியாகிய அந்த முகம்மதென்பவன் வந்தால் அவனது உக்கிரத்தை யுடைய சாமர்த்தியத்தைப் பார்க்கலாம்.

 

4143.  என்ன வஞ்சின மீறவே

     சொன்ன வஞ்சகத் துட்டனு

     மன்ன நாளினி லன்புறு

     மன்னர் சூழ்வர வந்தனன்.

4