பக்கம் எண் :

சீறாப்புராணம்

1522


இரண்டாம் பாகம்
 

தாத்துற் றஹ்ஹாக்குப் படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4178.  வதுவையிற் கொடையிற் போரின் மலிந்தமும் முரச மாறா

     ததிர்தரு மதீன மூதூ ரண்ணல்தாத் துற்ற காகுப்

     பதியினில் வாழுங் கத்து பானெனுங் கேளிர் தம்மே

     லெதிர்பொர வேண்டு மென்ன வெழுந்தனர் விரைவி னன்றே.

1

     (இ-ள்) விவாகத்தினாலும், கொடையினாலும், யுத்தத்தினாலும் ஓங்கப்பட்ட மூன்று முரசங்களும் நீங்காமல் முழங்கிக் கொண்டிருக்கும் பழமையான திருமதீனமா நகரத்தி னேந்தலாகிய நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தாத்துற் றஹ்ஹாக்கு நகரத்தில் வாழுகின்ற கத்துபா னென்று சொல்லுஞ் சுற்றத்தார் மீது எதிராய்ப் போர் புரிய வேண்டுமென்று சொல்லி வேகத்தோடு மெழும்பினார்கள்.

 

4179.  பேரிகை முரச மார்த்த பெருந்தவின் முருடு மார்த்த

     பூரிகை சின்ன மார்த்த பொங்குகா களங்க ளார்த்த

     வீரியர் தீன்தீ னென்ன விளம்பிய மொழிக ளார்த்த

     வாரணக் கலிமா வார்த்த வண்டரு மார்ப்ப வன்றே.

2

      (இ-ள்) அவர்கள் அவ்வா றெழும்ப, தேவர்களான மலாயிக்கத்து மார்களு முழங்கும் வண்ணம் பேரிகைகளும் முரசங்களு முழங்கின. பெரிய தவில்களு முருடுகளு முழங்கின. பூரிகைகளுஞ் சின்னங்களு முழங்கின. ஓங்கா நிற்கு மெக்காளங்கள் முழங்கின. வீரர்களான சஹாபாக்கள் தீன்! தீனென்று சொல்லிய வார்த்தைகள் முழங்கின. புறக்கானுல் மஜீதென்னும் வேதத்தின் ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவாகிய வசனங்கள் முழங்கின.

 

4180.  பாய்ந்தன பரிக ளாடிப் பறந்தன கொடிகள் வானிற்

     றோய்ந்தன குடைகள் பாலிற் றுலங்கின மறைக ளொன்றித்

     தேய்ந்தன படைக ளெங்குஞ் சிறந்தன சிவிகை போரின்

     வாய்ந்தன மள்ளர் தூளி மறைத்தன வாசை யம்ம.

3