பக்கம் எண் :

சீறாப்புராணம்

159


முதற்பாகம்
 

        நீங்கரும் பிணிவந் தடுத்திடி லவர்க

             ணிறைதரு முஹம்மதைக் காண்கிற்

        றீங்ககன் றிடுமச் செய்திகண் டறிந்து

             செறிதரு பிறநக ருளரும்

        பாங்கினிற் புகுந்து முகம்மது மலர்த்தாள்

             பணிந்துமெய் மகிழ்ச்சிபெற் றிருப்பார்.

79

     (இ-ள்) உயர்ச்சி பொருந்திய அந்தக் குனையினென்று சொல்லும் ஊரின்கண் வாசஞ்செய்பவர்களில் எவர்கள் வீட்டிலேனும் நீங்குதற் கரியநோயானது வந்துற்றால், அவ்வீட்டார்கள் வந்து மாட்சிமை தங்கிய நபி முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைத் தெரிசிப்பார்களேயாயின், உடனே அந்நோயானது அவர்களை விட்டும் நீங்கிவிடும். அச் சமாச்சாரத்தைப் பார்த்துணர்ந்து நெருங்கிய அன்னிய தேசங்களிலுள்ளவர்களும் ஒழுங்காக அக்குனையின் நகரத்தையடைந்து சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் தாமரைமலர் போலும் திருவடிகளிற்றாழ்ந்து தேகக்களிப்படைந் திருப்பார்கள்.

 

     370. மறைதராச் சோதி முகம்மது நயினார்

             வடிவுறு மெய்யினிற் றுகளு

        முறைதரா நீரிற் கழுவிலா திருந்து

             முலவுறு சிக்குமொன் றுணகாக்

        குறைதரா வாசங் கமழ்வது மாறாக்

             குமிழினீர்ச் சிறிதுமே யணுகாக்

        கறைதரா வரிச்செங் கண்டுயின் றெழினுங்

             கலந்துறு மாசுமொன் றணுகா.

80

     (இ-ள்) மறைவுபடாத பிரகாசத்தையுடைய நயினாரான நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது அழகு பொருந்திய சரீரத்தின்கண் துகளானது தங்காது. தண்ணீரினால் முழுக்காட்டிச் சுத்தி பண்ணாதிருந்தாலும் உலவாநிற்கும் மாசு முதலிய யாதொன்று மணுகாது. குறைவில்லாத கஸ்தூரியின் பரிமளமானது கமழ்வதும் நீங்காது. நாசியின் கண்ணுள்ள சளிநீர் கொஞ்சமேனும் பொருந்தாது. குற்றமற்ற சிவந்த இரேகைகள் படர்ந்த கண்கள் துயின்று எழும்பினாலும் அக்கண்களில் கலந்துறும் பீளை முதலான யாதொன்றுங் கிடையாது.

 

     371. சலமலா திகளி னாற்றமுந் தோற்றாத்

             தரையருந் திடுவதே யல்லா

        னிலமிசை யெவர்க்குங் கண்ணினிற் றோன்றா

             நீடரு நீழலுந் தோன்றா