பக்கம் எண் :

சீறாப்புராணம்

1679


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அளவற்ற தேவர்களான மலாயிக்கத்துமார்க ளியாவர்களும், நானும் பீசபீலுக்காக வல்லவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் திருவருளினாற் கட்டுகின்ற கச்சைகளையுங் கூர்மை தங்கிய வேலாயுத முதலிய எல்லா ஆயுதங்களையும் நிராகரியாமற் கொண்டு வேகமாய் இங்கு வந்து சேர்ந்தோம். நீங்களும் உங்களோடு தங்கிய கோதண்டங்களையும் வேல்களையுமுடைய சைனியங்களும் வறிதாக இருக்கின்ற காரணம் யாது?

 

4625. வெவ்விய தொழின டாத்தி நரகிடை வீழும் பாவம்

     வவ்விய மனத்தா ரென்னும் பனீகுறை லாவென் போர்பாற்

     செவ்விதி னெழுக வேண்டு மென்றனர் தெளியக் கேட்டுக்

     குவ்வினிற் சாய்கை யில்லாக் குரிசிலு மழகி தென்றார்.

4

      (இ-ள்) கடுமையான செய்கைகளைச் செய்து நரகலோகத்தின் கண் விழுகின்ற பாதகத்தைப் பற்றிய இதயத்தை யுடையவர்களென்று சொல்லும் பனீக்குறைலா வென்பவர்களிடத்துச் செவ்வையாக நாம் எழும்பிச் செல்ல வேண்டு மென்று சொன்னார்கள். அதை இப்பூமியின் கண் சரீரத்தினது நிழலில்லாத எப்பொருள்கட்கும் இறைவரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தெரியும்படிக் கேள்வியுற்று இதுவே ஒழுங்கென்று சொன்னார்கள்.

 

4626. தீனவர் தம்மை நோக்கிச் சிறந்தபா டலங்க ளோடுஞ்

     சேனையு மெழுக வென்னச் செப்பலுங் கேட்டவ் வேந்த

     ரானன மலர்ந்து சாற்றும் வள்ளுவ னழைத்து நீபோய்

     வானதிர் முரசஞ் சாற்றென் றுரைத்தலு மகிழ்ந்து போனான்.

5

     (இ-ள்) அவ்வாறு சொன்ன அவர்கள் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அரசர்களைப் பார்த்து நீங்கள் உங்களது மேலான குதிரைகளோடும், சைனியங்களோடும் எழுந்து வரவேண்டுமென்று சொன்னவளவில் அதை அந்த அரசர்கள் கேள்வியுற்றுத் தங்களது முகமானது மலரப் பெற்று அதைச் சொல்லுகின்ற வள்ளுவனைக் கூப்பிட்டு நீ சென்று ஆகாயமும் நடுங்குகின்ற முரசத்தை யடித்து யாவருக்குஞ் சொல்லுவாயாகவென்று சொல்லலும், அவனுஞ் சென்றான்.

 

4627. நீண்டவள் வாரைச் செவ்வே நேர்பெறக் கட்டி யோதைத்

     தூண்டும்பேர் முரசங் கூனற் றொறுவினி லேற்றி யேறிக்

     காண்டரு முடிவில் லாத கடிமண மறுகு புக்கி

     யீண்டின ரியாருங் கேண்மி னெனமொழி கூறிக் கூறும்.

6