பக்கம் எண் :

சீறாப்புராணம்

280


முதற்பாகம்
 

பாந்தள்வதைப் படலம்

 

வஞ்சி விருத்தம்

 

     700. கனலுண்ட கடுஞ்சுர மீதுநறும்

        புனலுண்டு பொருந்தின ரவ்வுழையின்

        சினமுண்டெழு செங்கதிர் பொங்குமிரு

        ளினமுண்டு குணக்கி லெழுந்ததுவே.

1

     (இ-ள்) நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் பறக்கத்தால் கனலினால் உண்ணப்பட்ட கொடிதான அந்தப் பாலை நிலத்தின் மீதுண்டாகிய வாசனை தங்கிய நீரை யாவர்களுங் குடித்து அவ்விடத்திற்றானே அவ்விராப்பொழுது தங்கியிருந்தார்கள். பின்னர் கோபத்தை யுட்கொண் டெழும்பாநிற்கும் சிவந்த கிரணங்களையுடைய சூரியனானவன் பொங்குகின்ற அந்தகாரத்தினது கூட்டத்தை விழுங்கிக் கீழ்பாற்கடலின்கண் உதயமாயினான்.

 

     701. மருதங்கள் கலந்த வனத்திலிருந்

        தெருதும்பரி யும்மெழி லொட்டகமும்

        பெருகுந்திர ளும்படி பின்செலவே

        வரதுங்க முகம்ம தெழுந்தனரே.

2

     (இ-ள்) அப்பொழுது மேலான வரப்பிரசாதத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அழகிய இடபங்களும் குதிரைகளும் ஒட்டகங்களும் அங்குள்ள ஜனக்கூட்டங்களும் பெருகிடும்படி தங்களது பின்னால்வர, மருதநிலங்கள் கலப்புற்ற அந்த வனத்தின் கண்ணிருந் தெழுந்தருளினார்கள்.

 

     702. வடிவாலொளி வீசிய வானவர்கோன்

        படிமீதுறு பாதையின் முன்செலவே

        நெடியோனபி பின்செல நீணெறியிற்

        கடிமார்பர் கலந்து நடந்தனரே.

3

     (இ-ள்) அவ்வித மெழுந்தருளவே தங்களது சொரூபத்தினா லெவ்விடத்தும் பிரகாசத்தை வீசாநிற்கும் அண்டர்பிரானாகிய