பக்கம் எண் :

சீறாப்புராணம்

485


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு சொன்ன ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் மரகதத்தினால் பாத்தி வளைந்து வச்சிரத்தினால் தாரை சார்த்தி நடுவில் பிரகாசிக்கும் வண்ணம் பெருமை பொருந்திய நாகரத்தினங்கள் பதித்து வெண்ணிறத்தை யுடைய முத்துக்கள் மெல்லிய புருடராகங்கள் முதலிய பல இரத்தினங்களை ஒளிரும் வண்ணம் அதில் தாக்கிச் சிந்தாநிற்கும் கிரணங்களை விரியச் செய்யும் ஒளியையுடைய ஒரு வஸ்திரத்தைத் தங்களின் கையில் கொண்டார்கள்.

 

1259. செகமதில் விண்ணி லொவ்வாச் செழுந்துகி லதனை யேந்தி

     யகமகிழ்ந் தினிது போற்றி யமரருக் கரசர் வாய்த்த

     முகமதி நோக்கி யாதி முறைமறைக் கலிமா வோதி

     முகம்மதை விளித்துச் செவ்வி வலக்கரத் திடத்தில் வைத்தார்.

19

      (இ-ள்) அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் இப்பூலோகத்திலும் ஆகாயலோகத்திலும் ஒவ்வாத செழிய அந்த வஸ்திரத்தை அவ்விதம் தங்களின் கைகளில் தாங்கி மனமகிழ்ச்சியடைந்து இனிமையுடன் துதித்துச் சிறப்புற்ற நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முகமாகிய சந்திரனைப் பார்த்து யாவற்றிற்கும் முதன்மையனான ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் ஒழுங்கை யுடைய வேதத்தினது ழுலாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் றசூலுல்லாஹிழு என்னும் கலிமாவைச் சொல்லி அந்நபிகள் பெருமானைக் கூப்பிட்டு அவர்களின் அழகிய வலதுகையின்கண் வைத்தார்கள்.

 

1260. மரைமலர் வதனச் சோதி முகம்மதின் கரத்தில் வானோ

     ரரசர்மிக் குவகை கூர்ந்தவ் வணிதுகி லிருத்தும் போதிற்

     றிரைமுகில் வரையும் விண்ணுந் திகாந்தமு நடுவு மீக்கொ

     ளிரைகட லேழும் பாரு மிலங்கொளி விரிந்த தன்றே.

20

      (இ-ள்) அவ்வாறு தாமரை மலர்போலும் முகத்தினது பிரகாசத்தை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் கையில் தேவர்களின் அரசரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் சந்தோஷம் அதிகரித்து அலங்காரமாகிய அந்த வஸ்திரத்தை இருத்துகின்ற சமயத்தில், ஒளிர்கின்ற பிரபையானது திரைவைக் கொண்ட மேகங்களையுடைய மலைகளிலும், ஆகாயத்திலும், திசையினது முடிவிலும், நடுவிலும் மேலான ஒளியையுடைய ஏழு சமுத்திரத்திலும் பூலோகத்திலும் விரிவுற்றது.