பக்கம் எண் :

சீறாப்புராணம்

751


முதற்பாகம்
 

2010. வரிசை நாயகன் றூதெனு முகம்மது நபியே

     யரசர் கேசரி கபீபெனுந் திமஸ்கினுக் கரச

     ரிரசி தம்பணி மணிதம னியமிவை யனைத்தும்

     பரிச னத்தொடு நுமக்கனுப் பினரெனப் பகர்ந்த.

37

      (இ-ள்) வரிசையை யுடைய நாயகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதரென்று சொல்லா நிற்கும் முகம்ம தென்னும் திருநாமத்தை யுடைய நபியே! அரசர்க ளாகிய யானைகளுக்குச் சிங்கேற்றைப் போன்ற ஹபீபென்று சொல்லும் திமஸ்கு நகரத்தினது மன்னவர் தமது பரிசனத்தோடும் வெள்ளி, ஆபரணம், இரத்தினம், பொன்னாகிய இவைகளெல்லாவற்றையும் உங்களுக்கு அனுப்பினா ரென்று கூறின.

 

2011. உரைத ராவிலங் கினங்கரி யுரைத்ததென் றுரவோர்

     தெரித ராப்பெரும் புதுமைகொ லெனச்சிர மசைத்து

     விரித ராநிறை பெருங்கடன் மேதினி யனைத்தும்

     புரித ராதிப ரிவரெனப் புகழ்ந்தயல் போனார்.

38

      (இ-ள்) அவ்விதம் கூற அம்முதியோர்கள் வாய் திறந்து பேசாத விலங்கின் கூட்டமானது சாட்சி கூறிற்று. இஃது என்றுங் காணக் கூடாத பெரும் ஆச்சரியமென்று தங்களின் தலைகளை யசைத்துச் சங்குகளைக் கொண்ட விரிந்த பெரிய பூரணப்பட்ட சமுத்திரத்தை யுடைய இந்தப் பூலோக முழுவதையும் அரசாட்சி செய்யும் அதிபர் இம்முகம்மதென்று சொல்லித் துதித்து விட்டு அயலில் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2012. மருந்தி லாப்பெரும் பிணிவளைத் தெனமதி மயங்கிக்

     கரிந்து மாமுகம் வாய்வெளுத் தறத்தலை கவிழ்ந்து

     திருந்தி லாமனத் தொடுஞ்சினத் தொடுஞ்செய லழிந்து

     பொருந்தி லாதுதன் கிளையொடு மபூசகல் போனான்.

39

      (இ-ள்) அபூஜகி லென்பவன் அவிழ்த மில்லாத பெரிய நோயானது சூழ்ந்ததைப் போலும் அறிவழிந்து மகத்தாகிய முகம் கருகப் பெற்று வாய் வெளுப்புற்று மிகவும் தலை கவிழ்ந்து செவ்வைப்படாத சிந்தையோடும் சினத்தோடும் தனது செயலானது கெடுதலடைந்து தன் பந்துக்களோடும் பொருந்தாது இருப்பிடம் போனான்.

 

2013. கன்ன லஞ்சுவைத் தீனிலை நிறுத்திய கபீபு

     மன்னர் மன்னவர் வரவிடு நிதியமு மணியு

     நன்ன யம்பெறுந் தோழர்கள் சூழ்வர நயினார்

     தம்ம கத்தினிற் செறித்தனர் செழும்புகழ் தழைப்ப.

40