பக்கம் எண் :

சீறாப்புராணம்

870


முதற்பாகம்
 

2338. இற்றை நாள்விருந் தென்னவிவ் வூரினிற்

     சொற்ற தில்லைத்தொன் மாமறைக் காரணத்

     துற்ற செய்தி யறியவென் றுன்னியோ

     பற்றி னாலிவர் பாலழைத் தாரென்பார்.

11

      (இ-ள்) அன்றியும், இந்த நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இன்றைய தினம் வரைக்கும் இந்த மக்கமா நகரத்தில் விருந்தென்று கூறினதில்லை பழமையான மகத்தாகிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தில் பொருந்திய காரணத்தினது வர்த்தமானத்தை யாவர்களும் உணர வென்று நினைத்தோ? அன்பினாற் றங்களிடத்திற்கு அழைத்தார்க ளென்று சொல்லுவார்கள்.

 

2339. இன்று வந்திவர் முன்றி லிருந்தனம்

     வென்றி யாக விருந்து வழங்கிடுஞ்

     சொன்றி யுமிவர் காரணத் தோற்றமு

     நன்று கண்டறி வோமினி நாமென்பார்.

12

      (இ-ள்) அன்றியும், நாம் இன்றைய தினத்தில் வந்து இந்த நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முற்றத்திலிருந்தோம். நல்லது! இவர்கள் வெற்றியுடன் விருந்தாய் வழங்கும் அன்னத்தையும் இவர்களின் காரணத்தின் விளக்கத்தையும் இனிக் கண்டு தெரிவோமென்று சொல்லுவார்கள்.

 

2340. இந்த வண்ண மிவர்க ளியம்பிட

     வந்த நாயகன் றூதுவ ரன்பொடு

     வந்த சோற்றையும் பாலையு மன்னவர்

     சிந்தை கூரச் சிறந்தளித் தாரரோ.

13

      (இ-ள்) இந்தப்படியாக இந்த ஜனங்கள் ஒருவருக்கொருவர் சொல்ல, அந்த நாயகனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவ ராகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அன்புடன் கொண்டு வரப் பெற்ற அவ்வன்னத்தையும் பாலையும் மன்னவர்களான இவ்விருந்தாளிகளின் மனமானது கூரும் வண்ணம் சிறப்புற்றுக் கொடுத்தார்கள்.

 

2341. சேருஞ் சீனியுந் தேனுமொத் தாலென

     மூர லும்மவை மூழ்கிய பாலையும்

     வீரர் தங்கள் விலாப்புறம் வீங்கிட

     வார வுண்டன ரங்கையில் வாரியே.

14