பக்கம் எண் :

சீறாப்புராணம்

895


இரண்டாம் பாகம்
 

மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம்

 

கலிவிருத்தம்

 

     2411. உயர்புகழ் முகம்மதுக் கும்பர் கோனபிப்

         பெயரளித் தாண்டுபன் மூன்று பேர்பெற

         நயமுற நடக்குமந் நாளிற் கச்சினுக்

         கியல்பெற யாவரு மீண்டி னாரரோ.

1

     (இ-ள்) மேலான கீர்த்தியை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்குத் தேவர்கட்கெல்லா மதிபதியாகிய ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்கள் புகழ் பெறும் வண்ணம் நபியென்னும் அபிதானத்தைக் கொடுத்து வருடங்கள் பதிமூன்று சரியாக நடைபெறு மந்தத் தினத்தில், ஒழுங்குடன் யாவர்களும் ஹஜ்ஜிற்காய் வந்து கூடினார்கள்.

 

     2412. அருவரைத் தடப்புய சகுது அசுஅதுஞ்

         தருமநன் னெறியுசை துடனன் சாரிகள்

         பெருகிய காபிரும் புறப்பட் டெண்ணிலா

         நரரொடு மக்கமா நகரை நண்ணினார்.

2

      (இ-ள்) அரிய மலைகளுக் கொப்பாகிய விசால முற்ற தோள்களையுடைய சஃதென்பாரும் அசுஅதும் புண்ணியத்தினது நல்ல சன்மார்க்கத்தையுடைய உசை தென்பவரோடு அன்சாரீன்களும் இவ்வ வெனப்படாது அதிகரித்த காபிர்களும் கணக்கற்ற மற்றும் ஜனங்களோடு பிரயாணித்துத் திருமக்கமா நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

    2413. வாய்ந்தவெண் டிசைஞரு மதீன மானகர்

        வேந்தரு மக்கமா நகரின் வீரரும்

        போந்துகஃ பாவினிற் புகுந்து தொன்முறை

        யேயந்தகஜ் செனுநெறி முடித்திட் டாரரோ.

3

     (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த சிறந்த எண்டிசையின் கண்ணுள்ளோர்களும் திரு மதீனமா நகரத்திலுள்ள அரசர்களும் திரு மக்கமா நகரத்தினது வயவர்களும் கஃபத்துல்லாவிற் போய் நுழைந்து ஆதி காலத்தினது ஒழுங்கைப் பொருந்திய ஹஜ்ஜென்னும் முறைமைகளைச் செய்து நிறைவேற்றினார்கள்.