சோழநாட்டுத் திருப்பதிகள் ஒரு விளக்கம் 108 திவ்ய தேசங்களில் மிக அதிக அளவில் 40 திவ்ய தேசங்களைத் தன்னகத்தே கொண்டு செழித்தோங்கிய செந்நெல் வயல்களினூடே செம்மாந்து நிற்கிறது சோழ நாடு. சோழநாட்டுத் திருப்பதிகள் யாவும் தரையோடு கட்டப்பட்டு பெரும்பாலும் ஒரே மாதிரியான அமைப்பைக்கொண்டவை. பாண்டி நாட்டுத் திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாளை மாடி வீட்டு பெருமாள்கள் என்று சொல்லலாம். அதாவது பாண்டி நாட்டுத்திருப்பதிகள் யாவும் இரண்டடுக்கு மூன்றடுக்கு, என்று சொல்வது போல் இரண்டு மூன்று தளங்கள் உடையதாய் முதல் தளத்தில் ஒரு திருக்கோலத்திலும், இரண்டாவது தளத்தில் பிறிதொரு திருக்கோலத்திலும், மூன்றாவதில் வேறொரு திருக்கோலத்திலும் எழுந்தருளியிருப்பார். (உ-ம்) திருக்கோட்டியூரில் முதல் தளத்தில் பாற்கடல் வண்ணனாகவும், 2வது தளத்தில் நின்ற நாராயணனாகவும், மூன்றாவது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாகவும் வீற்றிருக்கிறார். அதேபோல் கூடல் மாநகரில் முதல் தளத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் வ்யூக சுந்தரராஜனாகவும், 2வது தளத்தில் நின்ற திருக்கோலத்தில் சூரிய நாராயணன் என்னும் திருநாமத்திலும், 3வது தளத்தில் பள்ளி கொண்ட பெருமாளாகவும் காட்சியருளுகிறார். இதுபோன்ற அடுக்குகளான திருப்பதிகள் சோழநாட்டில் இல்லையென்று சொல்லலாம். மேலும் பாண்டி நாட்டுத் திருப்பதிகள் மலை, கடல், ஆறு, என்ற மூன்று இயற்கை சூழ்நிலைகளிலும் அமைந்துள்ளன. புல்லாணி-கடல், மாலிருஞ்சோலை - மலை, ஆழ்வார் திருநகரி - தாமிரபரணி, என்று இயற்கையின் மூன்றுவகைப் பிரிவுகளின் அரவணைப்பில் கிடக்கின்றன. ஆனால் சோழநாட்டு எம்பெருமானுக்கோ காவிரிக்கரையே கிடக்கை, காவிரிக்கரையே கிடக்கினும் தெவிட்டாத தீஞ்சுவைக் கனிகளென்று விளங்கும் திருமங்கை மன்னனின் திவ்யமங்களாசாசனத்தில் திளைத்திருப்பவர்கள் அரங்கனைவிட அழகு பொருந்திய ஆதனூர் ஆண்டளுக்கும் ஐயன், திருமங்கையோடு உரையாடி மகிழ்ந்த இந்தளூரான், திருமிழிசைக்குக் கட்டுப்பட்ட ஆராவமுதன், பேரழகுப் பொலிவில் திகழும் |