பக்கம் எண் :

375

62. திருவிடவெந்தை (திருவடந்தை)

     திவளும் வெண்மதி போல் திருமுகத் தரிவை
          செழுங்க டலமுதினிற் பிறந்த
     அவளும், நின்னாகத் திருப்பது மறிந்தும்
          ஆகிலு மாசை விடாளால்
     குவளையங் கண்ணி கொல்லியம் பாவை
          சொல்லு நின்தாள் நயந்திருந்த
     இவளை உன் மணத்தா லென் நினைந்திருந்தாய்
          இடவெந்தை யெந்தை பிரானே
                    (1108) பெரியதிருமொழி 2-7-1

     திருமங்கையாழ்வாரால் தன்னையே குழந்தையாகவும், தாயாகவும்
பாவித்துக்கொண்டு காதல் கொண்ட தன் மகள் படும் பாட்டை தாய் கூறுவது
போல், பாடலில் திருவாய் மலர்ந்தருளுகிறார்.

     செழிப்பான கடலில் பிறந்த அமுதத்தினின்று முதித்து, இளமை குன்றாது
வெண்மதி போல் பிரகாசிக்கும் அழகு பொருந்திய பெரிய பிராட்டியை நின்
அகத்தில் வைத்திருப்பதை, அறிந்தும், கொல்லிமலைப் பதுமை போன்று
குவளையொத்த கண்களைப் பெற்ற இப்பெண் (விஷயத்தை அறிந்திருந்தும்)
நின்பால், வைத்திருக்கும் பிரேமையை மாற்றாது நினைத்துக் கொண்டே
இருக்கிறாளே இவளைப்பற்றி நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்
இடவெந்தை எந்தை பிரானே என்கிறார். (கொல்லிப்பாவை கொல்லிமலையில்
தேவ நிர்மாணமாய் காண்போரை மோகிக்கச் செய்து துன்புறுத்தி் வந்த ஒரு
பெண்பதுமை)

     இவ்வாறு திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கோவளத்திற்கு
அடுத்த ஊராக அமைந்துள்ளது. மிகச்சிறிய கிராமமாக இருந்தாலும் எழில்
கொஞ்சும் இயற்கைச் சூழல் நிறைந்திருப்பதாகும். மாமல்லபுரத்திலிருந்து சுமார்
12 மைல்.

     இத்தலத்தைப்பற்றி வராஹ புராணத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர்
கௌசிக ரிஷிக்கு கூறியதாக உள்ளது.