2. திருப்புகலூர் - நட்டபாடை
 
12. குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,
முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.
உரை
   
13. காது இலங்கு குழையன், இழை சேர் திருமார்பன், ஒருபாகம்
மாது இலங்கு திருமேனியினான், கருமானின் உரி ஆடை
மீது இலங்க அணிந்தான், இமையோர் தொழ, மேவும் இடம் சோலைப்
போதில் அங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே.
உரை
   
14. பண் நிலாவும் மறை பாடலினான், இறை சேரும் வளை அம் கைப்
பெண் நிலாவ உடையான், பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த,
உள்-நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன், இடம் என்பர்
மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே.
உரை
   
15. நீரின் மல்கு சடையன், விடையன், அடையார் தம் அரண் மூன்றும்
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான், உலகு உய்யக்
காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர்
ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.
உரை
   
16. செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல்
பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரை
மெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி,
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.
உரை
   
17. கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை கலிக்க, பயில் கானில்,
குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற, குனித்தார் இடம் என்பர்
விழவின் ஓசை, அடியார் மிடைவு உற்று விரும்பிப் பொலிந்து எங்கும்
முழவின் ஓசை, முந் நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே.
உரை
   
18. வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன் மேல் விளங்கும் மதி சூடி,
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த, உகக்கும் அருள் தந்து, எம்
கள்ளம் ஆர்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள் இடம் என்பர்
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே.
உரை
   
19. தென் இலங்கை அரையன், வரை பற்றி எடுத்தான், முடி திண் தோள்,
தன் இலங்கு விரலால் நெரிவித்து, இசை கேட்டு, அன்று, அருள் செய்த
மின் இலங்கு சடையான் மடமா தொடு மேவும் இடம் என்பர்
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே.
உரை
   
20. நாகம் வைத்த முடியான், அடி கை தொழுது ஏத்தும் அடியார்கள்
ஆகம் வைத்த பெருமான், பிரமனொடு மாலும் தொழுது ஏத்த
ஏகம் வைத்த எரி ஆய் மிக ஓங்கிய எம்மான், இடம்போலும்
போகம் வைத்த பொழிலின்(ன்) நிழலால் மது வாரும் புகலூரே.
உரை
   
21. செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள் அல்லாக்
கைதவத்தர், மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து,
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.
உரை
   
22. புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை,
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து,
குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.
உரை