11. திருவீழிமிழலை - நட்டபாடை
 
108. சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,
படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,
மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,
விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.
உரை
   
109. ஈறு ஆய், முதல் ஒன்று ஆய், இரு பெண் ஆண், குணம் மூன்று ஆய்,
மாறா மறை நான்கு ஆய், வரு பூதம் அவை ஐந்து ஆய்,
ஆறு ஆர் சுவை, ஏழ் ஓசையொடு எட்டுத்திசை தான் ஆய்,
வேறு ஆய், உடன் ஆனான், இடம் வீழிமிழலையே.
உரை
   
110. வம்மின், அடியீர், நாள்மலர் இட்டுத் தொழுது உய்ய!
உம் அன்பினொடு எம் அன்பு செய்து, ஈசன் உறை கோயில்
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டித் திசை எங்கும்
விம்மும் பொழில் சூழ் தண்வயல் வீழிமிழலையே.
உரை
   
111. பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்,
உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,
விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.
உரை
   
112. ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின்
தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத்
தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர்
மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.
உரை
   
113. “கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்!” என வானோர்
எல்லாம் ஒரு தேர் ஆய், அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப,
வல்லாய் எரி காற்று ஈர்க்கு, அரி கோல், வாசுகி நாண், கல்
வில்லால், எயில் எய்தான் இடம் வீழிமிழலையே.
உரை
   
114. கரத்தால் மலி சிரத்தான்; கரி உரித்து ஆயது ஒரு படத்தான்;
புரத்தார் பொடிபட, தன் அடி பணி மூவர்கட்கு ஓவா
வரத்தான் மிக அளித்தான்; இடம் வளர் புன்னை முத்து அரும்பி,
விரைத் தாது பொன் மணி ஈன்று, அணி வீழிமிழலையே.
உரை
   
115. முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை
தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி,
பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த
மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.
உரை
   
116. பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில,
வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.
உரை
   
117. மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணம் இலிகள்,
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து,
பசும் பொன்கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே.
உரை
   
118. வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர்
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும்
யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம்
ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே.
உரை