24. சீகாழி - தக்கராகம்
 
250. “ பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!
காவாய்!” என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.
உரை
   
251. “எந்தை!” என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,
கந்தமாலை கொடு சேர் காழியார்,
வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.
உரை
   
252. தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,
கானமான் கைக் கொண்ட காழியார்,
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.
உரை
   
253. மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்,
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.
உரை
   
254. மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.
உரை
   
255. கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக்
கங்கை புனைந்த சடையார், காழியார்,
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.
உரை
   
256. கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார்,
அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே.
உரை
   
257. எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,
கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.
உரை
   
258. ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்,
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.
உரை
   
259. பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார், காழியார்,
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.
உரை
   
260. கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.
உரை