28. திருச்சோற்றுத்துறை - தக்கராகம்
 
294. செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்
துப்பன் என்னாது, அருளே துணை ஆக,
ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று
அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
295. பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்,
மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
296. செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர்,
கை கொள் வேலர், கழலர், கரிகாடர்,
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
297. பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு உளீர்!
துணி கொள் போரார், துளங்கும் மழுவாளர்,
மணி கொள் கண்டர், மேய வார் பொழில்
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
298. பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,
மறையும் ஓதி, மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
299. துடிகளோடு முழவம் விம்மவே,
பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக,
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
300. சாடிக் காலன் மாள, தலைமாலை
சூடி, மிக்குச் சுவண்டு ஆய் வருவார், தாம்
பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து
ஆடி, சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
301. பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக்
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்,
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல், சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
302. தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன்,
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
303. கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர்,
ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே!
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.
உரை
   
304. அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்!
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே.
உரை