33. திருஅன்பில் ஆலந்துறை - தக்கராகம்
 
349. கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா,
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம்,
அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.
உரை
   
350. சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி,
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்-
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.
உரை
   
351. ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து,
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்
நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.
உரை
   
352. பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.
உரை
   
353. நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடு முழவம் அதிர, மட மாதர்
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.
உரை
   
354. நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-
வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.
உரை
   
355. செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட
படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை,
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும்
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.
உரை
   
356. விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி,
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி,
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.
உரை
   
357. வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும்,
பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை;
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.
உரை
   
358. தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.
உரை
   
359. அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.
உரை