34. சீகாழி- தக்கராகம்
 
360. அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்,
கடல் ஆர் புடை சூழ் தரு, காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே.
உரை
   
361. திரை ஆர் புனல் சூடிய செல்வன்,
வரையார் மகளோடு மகிழ்ந்தான்,
கரை ஆர் புனல் சூழ்தரு, காழி
நிரை ஆர் மலர் தூவுமின், நின்றே!
உரை
   
362. இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை
துடி ஆர் இடையாளொடு துன்னும்,
கடி ஆர் பொழில் சூழ்தரு, காழி
அடியார் அறியார், அவலமே.
உரை
   
363. ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன்,
அளி ஆர் குழல் மங்கையொடு அன்பு ஆய்,
களி ஆர் பொழில் சூழ்தரு, காழி
எளிது ஆம், அது கண்டவர் இன்பே.
உரை
   
364. பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்,
முனி தான், உமையோடு முயங்கி,
கனி ஆர் பொழில் சூழ்தரு, காழி
இனிது ஆம், அது கண்டவர் ஈடே.
உரை
   
365. கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து
மலையான் மகளோடு மகிழ்ந்தான்,
கலையார் தொழுது ஏத்திய, காழி
தலையால் தொழுவார் தலையாரே.
உரை
   
366. திரு ஆர் சிலையால் எயில் எய்து,
உரு ஆர் உமையோடு உடன் ஆனான்,
கரு ஆர் பொழில் சூழ்தரு, காழி
மருவாதவர் வான் மருவாரே.
உரை
   
367. அரக்கன் வலி ஒல்க அடர்த்து,
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்,
சுரக்கும் புனல் சூழ்தரு, காழி
நிரக்கும் மலர் தூவும், நினைந்தே!
உரை
   
368. இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்
உருவில் பெரியாளொடு சேரும்,
கரு நல் பரவை கமழ், காழி
மருவ, பிரியும், வினை மாய்ந்தே.
உரை
   
369. சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற,
அமைந்தான், உமையோடு உடன் அன்பு ஆய்;
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி
சுமந்தார், மலர் தூவுதல் தொண்டே.
உரை
   
370. நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே.
உரை