47. திருச்சிரபுரம் - பழந்தக்கராகம்
 
504. பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?
உரை
   
505. கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய்,
அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம்
சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார்,
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே?
உரை
   
506. நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய்,
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப,
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே?
உரை
   
507. கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய்,
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே
கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள்
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே?
உரை
   
508. புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக்
கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும்
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே?
உரை
   
509. கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய்,
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?
உரை
   
510. குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால்
பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே
இறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து,
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே?
உரை
   
511. மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால்
நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும்
சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே!
உரை
   
512. மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச,
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே?
உரை
   
513. புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம்
மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே,
சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே?
உரை
   
514. தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை
பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்
சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே.
உரை