55. திருமாற்பேறு - பழந்தக்கராகம்
 
591. ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை
நீறு சேர் திருமேனியர்
சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்
மாறு இலா மணிகண்டரே.
உரை
   
592. தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை
அடைவார் ஆம், “அடிகள்!” என
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு
உடையீரே! உமை உள்கியே.
உரை
   
593. “பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய
கையான்” என்று வணங்குவர்
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா! நின் அடியார்களே.
உரை
   
594. சால மா மலர் கொண்டு, “சரண்!” என்று,
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று
நீலம் ஆர் கண்ட! நின்னையே.
உரை
   
595. “மாறு இலா மணியே!” என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர்
கூறனே! குலவும் திரு மாற்பேற்றில்
நீறனே! என்றும் நின்னையே.
உரை
   
596. உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை;
பரவாதார் இல்லை, நாள்களும்;
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று
அரையானே! அருள் நல்கிடே!
உரை
   
597. அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை
உரை கெடுத்து, அவன் ஒல்கிட
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப்
பரவிடக் கெடும், பாவமே.
உரை
   
598. இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி
ஒருவரால் அறிவு ஒண்ணிலன்,
மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப்
பரவுவார் வினை பாறுமே.
உரை
   
599. தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும்
நீசர்தம் உரை கொள்ளேலும்!
“தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின்
ஈசன்” என்று எடுத்து ஏத்துமே!
உரை
   
600. மன்னி மாலொடு சோமன் பணி செயும்
மன்னும் மாற்பேற்று அடிகளை
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
பன்னவே, வினை பாறுமே.
உரை