தொடக்கம் | ||
60. திருத்தோணிபுரம் - பழந்தக்கராகம்
|
||
645. |
வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும் ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத் துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும் பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே! |
உரை |
646. |
எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே! செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும் வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே! |
உரை |
647. |
பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக் கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை, செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும் பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே! |
உரை |
648. |
காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! “காதலால் பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள்” என்று, வளர் சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும் ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே! |
உரை |
649. |
பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்! தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும் நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே! |
உரை |
650. |
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச, வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள் தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே! |
உரை |
651. |
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை, அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்; தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும் கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே! |
உரை |
652. |
பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி, ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே! தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர் கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே! |
உரை |
653. |
நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்; பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்; சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும் வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே! |
உரை |
654. |
சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால் முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம் துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம் பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே! |
உரை |
655. |
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம் கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத் தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே. |
உரை |