62. திருக்கோளிலி - பழந்தக்கராகம்
 
667. நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம்
கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே.
உரை
   
668. ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த
தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே
பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே.
உரை
   
669. நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு,
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்-
கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே.
உரை
   
670. வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும்
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத்
தந்தைதனைச் சாடுதலும், “சண்டீசன்” என்று அருளி,
கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே.
உரை
   
671. வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால்,
“நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி” எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்-
கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே.
உரை
   
672. தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை,
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, “அங்கணன்” என்று ஆதரிக்கும்
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்-
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே.
உரை
   
673. கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான்,
சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான்,
மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில்
கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே.
உரை
   
674. அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப,
சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து,
மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
உரை
   
675. நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத்
தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்பு உடைமை
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்-
கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
உரை
   
676. தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்!
நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே.
உரை
   
677. நம்பனை, நல் அடியார்கள் “நாம் உடை மாடு” என்று இருக்கும்
கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை,
வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே.
உரை