64. திருப்- வணம்
 
690. அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்
குறை ஆர் மதியும் சூடி, மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்,
திறை ஆர் ஒளி சேர், செம்மை ஓங்கும், தென் திருப்பூவணமே.
உரை
   
691. மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து, மாமலையான் மடந்தை
ஒருபால் பாகம் ஆகச் செய்த உம்பர்பிரான் அவன் ஊர்
கரு ஆர் சாலி ஆலை மல்கி, கழல் மன்னர் காத்து அளித்த
திருவால் மலிந்த சேடர் வாழும் தென்திருப்பூவணமே.
உரை
   
692. போர் ஆர் மதமா உரிவை போர்த்து, பொடி அணி மேனியனாய்,
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்ணுதல், விண்ணவன், ஊர்
பார் ஆர் வைகைப் புனல் வாய் பரப்பி, பல்மணி பொன் கொழித்து,
சீர் ஆர் வாரி சேர நின்ற தென்திருப்பூவணமே.
உரை
   
693. கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி, காதில் ஓர் வார்குழையன்,
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன், இடம் ஆம்
படியார் கூடி, நீடி ஓங்கும் பல்புகழால் பரவ,
செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே.
உரை
   
694. கூர் ஆர் வாளி சிலையில் கோத்துக் கொடி மதில் கூட்டு அழித்த
பார் ஆர் வில்லி, மெல்லியலாள் ஓர் பால் மகிழ்ந்தான், இடம் ஆம்
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப,
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே.
உரை
   
695. நன்று தீது என்று ஒன்று இலாத நால்மறையோன், கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான், இடம் ஆம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே.
உரை
   
696. பைவாய் அரவம் அரையில் சாத்தி, பாரிடம் போற்று இசைப்ப,
மெய் வாய் மேனி நீறு பூசி, ஏறு உகந்தான் இடம் ஆம்
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடல் ஓவாத் தென் திருப்பூவணமே.
உரை
   
697. மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து,
கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி, பல்மணி பொன் கொழித்து,
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே.
உரை
   
698. பொய்யா வேத நாவினானும், மகள் காதலனும்,
கையால் தொழுது கழல்கள் போற்ற, கனல் எரி ஆனவன் ஊர்
மை ஆர் பொழிலின் வண்டு பாட, வைகை மணி கொழித்து,
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென்திருப்பூவணமே.
உரை
   
699. அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும், அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து, அயலே
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென்திருப்பூவணமே.
உரை
   
700. திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென்திருப்பூவணத்துப்
பெண் ஆர் மேனி எம் இறையை, பேர் இயல் இன்தமிழால்,
நண்ணார் உட்கக் காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே.
உரை