66. திருச்சண்பைநகர் - தக்கேசி
 
712. பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும்
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே.
உரை
   
713. சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப்
போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர்
மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த
சாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே.
உரை
   
714. மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய
நிகர்-ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார்
பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த,
தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே.
உரை
   
715. மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட
தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக்
கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால்,
சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே.
உரை
   
716. கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
குலம் ஆர் கயிலைக்குன்று அது உடையர், கொல்லை எருது ஏறி
நலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளை
சலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே.
உரை
   
717. மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க
ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.
உரை
   
718. இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து,
அருளைச் செய்யும் அம்மான்-ஏர் ஆர் அம் தண்கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்-
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே.
உரை
   
719. மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும்,
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி
தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல்
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.
உரை
   
720. போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்,
நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு-நான்கின்
மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொல்-நூலர்,
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே.
உரை
   
721. வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி,
சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே.
உரை
   
722. வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
“நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.
உரை