தொடக்கம் | ||
69. திருஅண்ணாமலை - தக்கேசி
|
||
743. |
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்; மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும் ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே. |
உரை |
744. |
மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும் வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி, அம் சொல் கிளிகள், “ஆயோ!” என்னும் அண்ணாமலையாரே. |
உரை |
745. |
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல் ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும் ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண் ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே. |
உரை |
746. |
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார், தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார் பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம் அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே. |
உரை |
747. |
உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார், செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார் பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே. |
உரை |
748. |
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார், நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில் கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத, அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே. |
உரை |
749. |
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல் அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே. |
உரை |
750. |
மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள் நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார் “திறம் தான் காட்டி அருளாய்!” என்று தேவர் அவர் வேண்ட, அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே. |
உரை |
751. |
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை; மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு, கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்!” என்று, ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே. |
உரை |
752. |
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும் பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்! வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில், அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே. |
உரை |
753. |
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை, நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே. |
உரை |