70. திருஈங்கோய்மலை - தக்கேசி
 
754. வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி,
தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா,
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த,
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே.
உரை
   
755. சூலப் படை ஒன்று ஏந்தி, இரவில் சுடுகாடு இடம் ஆக,
கோலச் சடைகள் தாழ, குழல், யாழ், மொந்தை கொட்டவே,
பால் ஒத்தனைய மொழியாள் காண, ஆடும் பரமனார்
ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய் மலையாரே.
உரை
   
756. கண் கொள் நுதலார், கறை கொள் மிடற்றார், கரியின் உரி-தோலார்,
விண் கொள் மதி சேர் சடையார், விடை ஆர் கொடியார், வெண் நீறு
பெண் கொள் திருமார்பு அதனில் பூசும் பெம்மான், எமை ஆள்வார்
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே.
உரை
   
757. மறையின் இசையார், நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும்,
குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன்சடை தாழ,
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப, படு காட்டு எரி ஆடும்
இறைவர் சிறை வண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
உரை
   
758. நொந்த சுடலைப் பொடி-நீறு அணிவார், நுதல் சேர் கண்ணினார்,
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன்சடை தாழ,
பந்து அண் விரலாள் பாகம் ஆக, படுகாட்டு எரி ஆடும்
எம்தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே.
உரை
   
759. நீறு ஆர் அகலம் உடையார், நிரை ஆர் கொன்றை அரவோடும்
ஆறு ஆர் சடையார், அயில்வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும்
சீறா எரி செய் தேவர் பெருமான், செங்கண் அடல் வெள்ளை-
ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
உரை
   
760. வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன், விரிகொன்றை
நனை ஆர் முடிமேல் மதியம் சூடும் நம்பான், நலம் மல்கு
தனை ஆர் கமலமலர் மேல் உறைவான் தலையோடு அனல் ஏந்தும்
எனை ஆள் உடையான்-உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
உரை
   
761. பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால்
நெருக்கி அடர்த்து, “நிமலா, போற்றி!” என்று நின்று ஏத்த,
இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
உரை
   
762. வரி ஆர் புலியின் உரி-தோல் உடையான், மலையான் மகளோடும்
பிரியாது உடன் ஆய் ஆடல் பேணும் பெம்மான், திருமேனி
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்-ஈங்கோய்மலையாரே.
உரை
   
763. பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும்,
மண்டை கலனாக் கொண்டு திரியும் மதி இல் தேரரும்,
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது, உமையோடு உடன் ஆகி,
இண்டைச் சடையான், இமையோர் பெருமான்-ஈங்கோய்மலையாரே.
உரை
   
764. விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம் தன்னுள்,
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன்,
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன்
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே.
உரை