82. திருவீழி மிழலை - குறிஞ்சி
 
882. இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.
உரை
   
883. வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர,
ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில்
கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும்
வேதத்து ஒலி ஓவா வீழி மிழலையே.
உரை
   
884. பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு,
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில்
மயிலும் மடமானும் மதியும் இள வேயும்
வெயிலும் பொலி மாதர் வீழி மிழலையே.
உரை
   
885. இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில்
குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை,
விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே.
உரை
   
886. கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக,
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில்
மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும்
விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.
உரை
   
887. மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்
சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள்
மேலால் எரி காட்டும் வீழி மிழலையே.
உரை
   
888. மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்,
கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில்
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.
உரை
   
889. எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி;
கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில்
படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை
விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே.
உரை
   
890. கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது,
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில்
படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.
உரை
   
891. சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும்
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்
தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.
உரை
   
892. மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள்
ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன்
வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.
உரை