97. திருப்புறவம் - குறிஞ்சி
 
1047. எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.
உரை
   
1048. “மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன்” என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்
மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.
உரை
   
1049. வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே
புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர்
பற்று ஆய், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும்
பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே.
உரை
   
1050. துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து,
மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,
பல்-நாள், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும்
பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.
உரை
   
1051. “தேவா! அரனே! சரண்!” என்று இமையோர் திசைதோறும்,
“காவாய்!” என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.
உரை
   
1052. ‘கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று, “அரனே! நின் அடி சரண்!” என்னும் அடியோர்க்குப்
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி’ என்பர்
பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.
உரை
   
1053. “எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன,
கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப்
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி” என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே.
உரை
   
1054. பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்;
புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவமே.
உரை
   
1055. “மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும்,
மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு
ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம்” என்பர்
பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே.
உரை
   
1056. வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்;
மெய் அல தேரர், “உண்டு, இலை” என்றே நின்றே தம்
கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர்
பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.
உரை
   
1057. பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்-
இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.
உரை