100. திருப்பரங்குன்றம் - குறிஞ்சி
 
1080. நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை
சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.
உரை
   
1081. அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து,
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து,
திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி
பங்கினன் மேய நன்நகர்போலும் பரங்குன்றே.
உரை
   
1082. நீர் இடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரை கொன்றை
சீர் இடம் கொண்ட எம் இறைபோலும், சேய்து ஆய
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி,
பாரிடம் பாட, இனிது உறை கோயில் பரங்குன்றே.
உரை
   
1083. வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டு அறை சோலைப் பரங்குன்றம்,
தளிர் போல் மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம்,
நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர்தானே.
உரை
   
1084. பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதி ஆகிய ஈசன், தொல்மறை
பன்னிய பாடல் ஆடலன், மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை, உறு நோயே.
உரை
   
1085. கடை நெடு மாடக் கடி அரண் மூன்றும் கனல் மூழ்கத்
தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில்
புடை நவில் பூதம் பாட, நின்று ஆடும் பொரு சூலப்-
படை நவில்வான்தன் நன்நகர்போலும் பரங்குன்றே.
உரை
   
1086. அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால்
எயில் பட எய்த எம் இறை மேய இடம்போலும்
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை,
பயில் பெடைவண்டு பாடல் அறாத பரங்குன்றே.
உரை
   
1087. மைத் தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்-
பத்தின, திண்தோள் இருபதும், செற்றான் பரங்குன்றைச்
சித்தம் அது ஒன்றிச் செய் கழல் உன்னிச் “சிவன்” என்று
நித்தலும் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.
உரை
   
1088. முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி
உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும்,
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகித் திகழ்சோதி,
பந்து இயல் அம் கை மங்கை ஒர்பங்கன், பரங்குன்றே!
உரை
   
1089. குண்டு ஆய் முற்றும் திரிவார், கூறை மெய் போர்த்து,
மிண்டு ஆய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல;
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத்
தொண்டால் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.
உரை
   
1090. தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன்,
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத்
தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி,
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.
உரை