124. திருவீழிமிழலை - திருவிராகம்
 
1337. அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர்,
நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ்
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1338. இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர்
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில்
இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு
நிருபமன், மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1339. “கலைமகள் தலைமகன், இவன்” என வருபவர்
அலை மலிதரு புனல், அரவொடு, நகுதலை,
இலை மலி இதழியும், இசைதரு சடையினர்
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1340. மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர்
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1341. புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர்
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு
நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1342. அன்றினர் அரி என வருபவர்-அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி
சென்று கொள் வகை சிறு முறுவல்கொடு ஒளி பெற
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1343. கரம் பயில் கொடையினர் கடிமலர் அயனது ஒர்
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர்,
வரம் பயில் கலைபல மறை முறை அறநெறி
நிரம்பினர், மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1344. ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது-
கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1345. அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்-
வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1346. மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர்
வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர்
துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ்
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே.
உரை
   
1347. நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள்
வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு
கற்று வல்லவர் உலகினில் அடியவரே.
உரை