தொடக்கம் | ||
128. திருப்பிரமபுரம் - திருஎழுகூற்றிருக்கை
|
||
1382. |
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை; இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை; ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை; இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை; ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம், நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம், ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை; ஒரு தனு இருகால் வளைய வாங்கி, முப்புரத்தோடு நானிலம் அஞ்ச, கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை; ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம், முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு, இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து, நால்மறை ஓதி, ஐவகை வேள்வி அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி, வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை; அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை; இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை; பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை; பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை; வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை; ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன் விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை; முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப் பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை; ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை; எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை; ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும், மறை முதல் நான்கும், மூன்று காலமும், தோன்ற நின்றனை; இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும், மறு இலா மறையோர் கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்; அனைய தன்மையை ஆதலின், நின்னை நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே. |
உரை |