132. திருவீழிமிழலை - மேகராகக்குறிஞ்சி
 
1416. ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு ஈர்-இருவர்க்கு
                                                             இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர் நெறி
                                        அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும்
                                                             மிழலை ஆமே.
உரை
   
1417. பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே மத்து ஆக, புத்தேளிர் கூடி,
மறி கடலைக் கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும்
                                                             கோயில்
செறி இதழ்த் தாமரைத்தவிசில்-திகழ்ந்து ஓங்கும் இலைக் குடைக்
                                         கீழ், செய் ஆர்செந்நெல்
வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை
                                                             ஆமே.
உரை
   
1418. எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும்,
                                                   எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்சிலை
                                   வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம் முகம் காட்ட, குதித்து
                                                           நீர்மேல்
விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம் வாய் காட்டும் மிழலை
                                                           ஆமே.
உரை
   
1419. உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய், அங்கு
                                                   அங்கே நின்றான்கோயில்
வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல நடம் ஆட, வண்டு பாட,
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள் கை ஏற்கும் மிழலை
                                                             ஆமே.
உரை
   
1420. காணும் ஆறு அரிய பெருமான் ஆகி, காலம் ஆய், குணங்கள் மூன்று
                                                             ஆய்,
பேணு மூன்று உருஆகி, பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான்
                                                             கோயில்
"தாணு ஆய் நின்ற பரதத்துவனை, உத்தமனை, இறைஞ்சீர்!" என்று
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை
                                                             ஆமே.
உரை
   
1421. அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும்
                                                             அடக்கி, ஞானப்
புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர்
                                                             கோயில்
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம் திகழ,
                                                             சலசத்தீயுள்,
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட, மணம் செய்யும் மிழலை
                                                             ஆமே.
உரை
   
1422. ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு மலர்க்கையன், இமயப்பாவை
கூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும் குணம் உடையோன்,
                                                             குளிரும் கோயில்
சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி, மது உண்டு, சிவந்த வண்டு
வேறு ஆய உருஆகி, செவ்வழி நல்பண் பாடும் மிழலை ஆமே.
உரை
   
1423. கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி, கை மறித்து,
                                                   கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த
                                                   விரல் புனிதர்கோயில்
தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி,
                                                             ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி விமானம் சேர் மிழலை
                                                             ஆமே.
உரை
   
1424. செந்தளிர் மா மலரோனும் திருமாலும், ஏனமொடு அன்னம் ஆகி,
அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த, வெளிப்பட்டோன் அமரும்
                                                   கோயில்
புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி, நெய் சமிதை கையில்
                                                   கொண்டு,
வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர்
                                                   மிழலை ஆமே.
உரை
   
1425. எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர் சாக்கியரும்,
                                                                   என்றும் தன்னை
நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு அருள்புரியும்
                                                                   நாதன் கோயில்
பண் அமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு,
விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்தோடும் இழியும் மிழலை
                                                                       ஆமே.
உரை
   
1426. மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர்
                                                                 பாதம்
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள்
                                                              பயிலும் நாவன்,
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி,
இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும்
                                                   இயல்பினோரே.
உரை