135. திருப்பராய்த்துறை - மேகராகக்குறிஞ்சி
 
1448. நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,
பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே.
உரை
   
1449. கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை,
வந்த பூம்புனல், வைத்தவர்
பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை
அந்தம் இல்ல அடிகளே.
உரை
   
1450. வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
ஓத நின்ற ஒருவனார்;
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை
ஆதி ஆய அடிகளே.
உரை
   
1451. தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு
நூலும் தாம் அணி மார்பினர்
பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை,
ஆல நீழல் அடிகளே.
உரை
   
1452. விரவி நீறு மெய் சுவர், மேனிமேல்;
இரவில் நின்று எரி ஆடுவர்;
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை
அரவம் ஆர்த்த அடிகளே.
உரை
   
1453. மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடையவர்
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.
உரை
   
1454. விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்;
சடையில் கங்கை தரித்தவர்;
படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே.
உரை
   
1455. தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை
நெருக்கினார், விரல் ஒன்றினால்;
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் தன்னை, அடிகளே.
உரை
   
1456. நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த்
தோற்றமும் அறியாதவர்;
பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை
ஆற்றல் மிக்க அடிகளே.
உரை
   
1457. திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள்,
உரு இலா உரை கொள்ளேலும்!
பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை
மருவினான் தனை வாழ்த்துமே!
உரை
   
1458. செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்மேல், சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,
செல்வம் ஆம், இவை செப்பவே.
உரை