2.9 திருமழபாடி - இந்தளம்
 
1558. களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.
1
உரை
   
1559. காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள்
ஆச்சிலாத பளிங்கினன்; அஞ்சும் முன் ஆடினான்;
பேச்சினால் உமக்கு ஆவது என்? பேதைகாள், பேணுமின்!
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே!
2
உரை
   
1560. உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர்தங்களை
பரம் கெடுப்பவன், நஞ்சை உண்டு பகலோன்தனை
முரண் கெடுப்பவன், முப்புரம் தீ எழச் செற்று, முன்,
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே.
3
உரை
   
1561. பள்ளம் ஆர் சடையின் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான், விடை எறிய வேதியன்,
வள்ளல், மா மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரிமின், வினைஆயின ஓயவே!
4
உரை
   
1562. தேன் உலாம் மலர் கொண்டு, மெய்த் தேவர்கள், சித்தர்கள்
பால்நெய் அஞ்சு உடன் ஆட்ட, முன் ஆடிய பால்வணன்
வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே, குறி கூடுமே.
5
உரை
   
1563. தெரிந்தவன், புரம்மூன்று உடன்மாட்டிய சேவகன்,
பரிந்து கைதொழுவார் அவர்தம் மனம் பாவினான்,
வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான், மழபாடியைப்
புரிந்து கைதொழுமின்! வினைஆயின போகுமே.
6
உரை
   
1564. சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு உடை
எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்,
மைந்தன், வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினைஆயின தேயுமே.
7
உரை
   
1565. இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை
உரக் கையால் எடுத்தான்தனது ஒண் முடிபத்து இற
விரல் தலை நிறுவி, உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே.
8
உரை
   
1566. ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்,
காலன் ஆர் உயிர் வீட்டிய மா மணிகண்டனார்
சால நல் அடியார் தவத்தார்களும் சார்வுஇடம்,
மால் அயன் வணங்கும், மழபாடி எம் மைந்தனே.
9
உரை
   
1567. கலியின் வல் அமணும், கருஞ்சாக்கியப்பேய்களும்,
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி
பலியும் பாட்டொடு பண் முழவும், பலஓசையும்,
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே!
10
உரை
   
1568. மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழிக் கவுணியன்,
ஒலிசெய் பாடல்கள் பத்துஇவை வல்லார்.......உலகத்திலே.
11
உரை