2.20 திருஅழுந்தூர் - இந்தளம்
 
1677. தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மா மடம் மன்னினையே.
1
உரை
   
1678. கடல் ஏறிய நஞ்சு அமுதுஉண்டவனே!
உடலே! உயிரே! உணர்வே! எழிலே!
அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர்
விடலே! தொழ, மா மடம் மேவினையே.
2
உரை
   
1679. கழிகாடலனே! கனல் ஆடலினாய்!
பழிபாடு இலனே! அவையே பயிலும்
அழிபாடு இலராய், அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே.
3
உரை
   
1680. வானே! மலையே! என மன் உயிரே!
தானே தொழுவார் தொழு தாள் மணியே!
ஆனே! சிவனே! அழுந்தையவர், "எம்
மானே!" என, மா மடம் மன்னினையே.
4
உரை
   
1681. அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்!
நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும்,
இலைஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ!
நிலையா அது கொள்க என, நீ நினையே!
5
உரை
   
1682. நறவு ஆர் தலையின் நயவா! உலகில்
பிறவாதவனே! பிணி இல்லவனே!
அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர்
மறவாது எழ, மா மடம் மன்னினையே.
6
உரை
   
1683. தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம்
சுடும் ஆறு வல்லாய்! சுடர் ஆர் சடையில்
அடும் ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர்
நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.
7
உரை
   
1684. பெரியாய்! சிறியாய்! பிறையாய்! மிடறும்
கரியாய்! கரிகாடு உயர்வீடு உடையாய்!
அரியாய்! எளிவாய்! அழுந்தை மறையோர்
வெரியார் தொழ, மா மடம் மேவினையே.
8
உரை
   
1685. மணி நீள் முடியால் மலையை அரக்கன்
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த
அணி ஆர் விரலாய்! அழுந்தை மறையோர்
மணி மா மடம் மன்னி இருந்தனையே.
9
உரை
   
1686. முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர்
நெடியான், மலரான் நிகழ்வால் இவர்கள்
அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர்
படியால் தொழ, மா மடம் பற்றினையே.
10
உரை
   
1687. அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத்
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்,
உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.
11
உரை